Monday, April 8, 2024

சம பலம் அற்றவர்களிடம் நட்பு சாத்தியமா?

ஒரு பாம்பாட்டிக்கு அவர் வழக்கப்படி சென்று கொண்டிருக்கும்போது ஒரு பாம்பு கிடைத்தது.  அதை தன்னுடைய பெட்டியில் போட்டுக் கொண்டார் . இன்னும் சிறிது தூரம் சென்றவுடன் ஒரு எலியும் கிடைத்தது . அதை அந்த பாம்புக்கு உணவாக அந்தப் பெட்டியிலேயே போட்டுவிட்டு அந்தப் பெட்டியை தன் தலையில் வைத்து  நடக்க ஆரம்பித்தார்.  பாம்பும் தன் இறையான எலியை சாப்பிட தயாரானது. 



எலிக்கு தன்னுடைய விதி முடியப்போகிறது என்று புரிந்தது . ஆனாலும் அது தன்னுடைய பயத்தை வெளிக்காட்டக் கொள்ளவில்லை . தைரியமாக பாம்புடன் “ என்னை இப்பொழுது தாங்கள் சாப்பிடாமல் இருந்தால்,  சிறிது நேரத்தில் உங்களை இந்த பெட்டியில் இருந்து வெளியே செல்ல என்னால் உதவ முடியும்”  என்று கூறியது.  ஆனால் பாம்பு அதை லட்சியம் செய்யாமல் “எனக்கு இப்பொழுது பயங்கர பசியாக இருக்கிறது.  ஆகவே உன்னை உண்ணப் போகிறேன்”  என்றது.  எலி பாம்பைப் பார்த்து “ நான் இவ்வளவு சிறிதாக இருக்கிறேன் என்னை சாப்பிட்டா  உன் பசி தீரப் போகிறது என்னை இப்பொழுது உயிரோடு விட்டால் உன்னை இந்த பெட்டியில் இருந்து வெளியே செல்ல என்னால் உதவ முடியும் ஒரு முறை வெளியே சென்று விட்டால் உனக்கு எக்கச்சக்கமாக உணவு கிடைக்கும் “ என்று ஆசை மூட்டியது.  பாம்பு எலி சொன்ன வார்த்தையை சிறிது நேரம் நினைத்துப் பார்த்தது.  அதற்கும் எலி சொல்வதுதான் சரி என்று தோன்றியது . தான் ஒரு முறை இந்தப் பெட்டியில் இருந்து வெளியே சென்று விட்டால் எலியை விட பன்மடங்கு பெரிதான உயிர்களை எளிதாக சாப்பிட முடியும் என்று நினைத்தது . ஆகவே அந்த எலியை உயிரோடு விட்டது.  எலியும் அந்த பெட்டியில் தன்னுடைய பற்களால் ஒரு பெரிய ஓட்டை போட ஆரம்பித்தது.



பாம்பாட்டிக்கு தெரியாமல் , அந்த எலி தான் செய்த ஓட்டை வழியாக வெகு  வேகமாக வெளியேறி,  அருகில் இருந்த ஒரு எலி வளைக்குள் ஒளிந்து கொண்டது.  பாம்பும் எலி செய்த ஓட்டை வழியாக வெளியேறினாலும்,  அதனால் எலி அளவு வேகமாக ஓட முடியவில்லை . அதற்குள் எலி அந்த வளைக்குள் புகுந்து ஒளிந்து கொண்டது.  பாம்பும் அந்த எலி வலையினுள் நுழைய முற்பட்டது . ஆனால்  அது மிகவும் சிறியதாக இருந்ததால் அதனால் நுழைய முடியவில்லை.  இப்பொழுது பாம்புக்கு இருந்த ஒரே வழி , எப்படியாவது எலியை அந்த வளையில் இருந்து வெளியே வரவழைத்து சாப்பிடுவதுதான் . அது அன்பு ஒழுக “நண்பனே வெளியே வா . என்னிடமிருந்து ஏன் நீ விலகி ஓடுகிறாய் . நான் உன் உயிரைக் காப்பாற்றினேன் இல்லையா ?  எதற்காக என்னிடமிருந்து இப்படி விலகி ஓடுகிறாய் ?”  என்று கேட்டது . ஆனால் எலி இடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.  பாம்பு விடாமல் “ அந்த பாம்பாட்டி இடம் இருந்து என் உயிரை நீ காப்பாற்றி இருக்கிறாய் . ஆகவே நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் . ஆகவே வெளியே வா “ என்றது.  வளையின் உள்ளிருந்து எலி “ நாம் இருவரும் சமமானவர்கள் இல்லை . என்றைக்கு இருந்தாலும் நான் உன்னுடைய உணவு . ஒரு பிரச்சினை என்று வரும்போது நாம் நண்பர்களானோம். ஆனால் சாதாரண சமயங்களில் உன்னை நான் நம்ப முடியாது”  என்றது . பாம்புக்கு தன் இயலாமை புரிந்தாலும்,  அந்த எலியின் சாமர்த்தியம் அதற்குப் புரிந்தது . வேறு வழி இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.

( இந்த கதை கவிஞர் மஞ்சனா அவர்களின் கதையிலிருந்து தழுவி எழுதப்பட்டது).

No comments:

Post a Comment