Saturday, March 30, 2024

இளவரசனும் மலர் ராணியின் மகளும் பாகம் 2

 

இப்படி அந்த மூதாட்டி ஒரு அழகான பெண்ணை தான் மணமுடிக்க வேண்டும் என்பதை  கேட்டவுடன் அந்த இளவரசனுக்கு இந்த மூதாட்டி ஒரு தேவதையாக தான் இருக்க வேண்டும் . தான் அவருக்கு உதவியதற்கு பதிலாக இப்பொழுது தனக்கு ஒரு நன்மை செய்கிறாள் , என்று தோன்றியது . ஆகவே அவர் கொடுத்த மணியை மிகவும் பத்திரமாக தன் பையில் வைத்துக் கொண்டார்.  அதன் பிறகு அரண்மனைக்குச் சென்று தன் தந்தையிடம் நடந்ததை கூறி , இப்பொழுது தான் மலர் ராணியின் மகளை காப்பாற்றி கூட்டி வருவதாக  கூறினார் . எல்லா இடத்துக்கும் சென்று அவளை தேடி அழைத்து வருவதாக கூறினார் . அவர் தந்தையும் அதற்கு சம்மதித்த பின் , அடுத்த நாள் தன்னுடைய குதிரையில் இளவரசன் தன் பயணத்தை தொடங்கினார்.  அப்படி ஒரு வருடத்திற்கு மேல் அவருடைய பயணம் தொடர்ந்தும் , அந்த மலர் ராணியின் மகள் எங்கே இருக்கிறாள் என்பதை பற்றி அவருக்கு எந்த விபரமும் கிடைக்கவில்லை .



இதில்  இளவரசனும் , குதிரையும் மிகவும் களைத்துப் போனார்கள் . இளவரசருக்கும் இந்த பயனற்ற பயணத்தால் மிகவும் சோகமாகவும் இருந்தார் .  இப்படி இருக்கும் வேளையில் ஒரு நாள் அவர் ஒரு குடிசையின் முன் நின்று கொண்டிருந்தார் . அந்த குடிசையின் வாயிலில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார் . அவரிடம் இளவரசன் “ இந்த மலர் ராணியின் மகளை கடத்திச் சென்ற பறக்கும் நாகத்தை பற்றி தங்களுக்கு ஏதேனும் தெரியுமா “ ? என்று கேட்டார்.  சிறிது யோசித்து விட்டு அந்த முதியவர் “  எனக்கு ஒன்றும் தெரியாது . இதே பாதையில் இன்னும் ஒரு வருடம் நடந்து சென்றால் என்னுடைய தந்தையின் வீடு வரும் . அவருக்கு இதைப்பற்றி ஏதேனும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு” என்று கூறினார் . இதுவரை எந்தத் தகவலுமே கிடைக்காமல் இருந்த இளவரசருக்கு ஏதோ இந்த அளவாவது ஒரு விபரம் தெரிந்ததே என்று அந்த முதியவருக்கு நன்றி கூறியபடி அவர் காட்டிய பாதையில் பயணத்தை தொடர்ந்து சென்றார்.  இப்படி தொடர்ந்த பயணத்தில் அவருக்கு இன்னொரு முதியவர் தென்பட்டார் . அவரிடமும் இதே கேள்வியை இளவரசர் கேட்டபோது அவரும் எனக்குத் தெரியாது , இன்னும் சிறிது காலம்  நடந்தால் எனது தந்தையின் வீடு வரும்.  அவர் நிச்சயமாக உனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவியாக  இருப்பார்  என்று கூறினார் .



(இந்த கதை ஐரோப்பாவின் பழங்கதைகளில் இருந்து தழுவி எழுதப்பட்டது)

 

பாகம் 3 தொடரும்.


No comments:

Post a Comment