Saturday, March 30, 2024

இளவரசனும் மலர் ராணி மகளும் பாகம் 4

 

 

அந்த பறக்கும் நாகத்தின் அன்னைக்கு இந்த இளவரசனின் சிரித்த முகமும்  பழகும் முறையும் மிகவும் பிடித்திருந்தது.  இருந்தாலும் அவருக்கு இளவரசனை இன்னும் சிறிது சோதனை செய்ய வேண்டும் என்று தோன்றியது.   ஆகவே “உனக்கு என்னிடம் உண்மையிலேயே வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்,  என்னுடைய குதிரையை நீ குறைந்தது மூன்று நாட்களுக்கு அருகில் உள்ள புல்வெளியில் மேய விட்டு கொண்டு வர வேண்டும்.  அப்படி நீ  குதிரையை கொண்டு வர தவறினால்,  அன்றே உன்னை நாங்கள் கொன்று தின்று விடுவோம்”  என்று கூறினார் . அந்த மூதாட்டி கூறியபடியே அந்தத் தோட்டத்தில் ஒரு குதிரையும் இருந்தது . அதை இழுத்துக் கொண்டு இளவரசன் அந்தப் புல்வெளிக்கு அழைத்துச் சென்றார் . அந்த புல்வெளியை அடைந்த மறு நிமிடமே அந்த குதிரை காணாமல் போய்விட்டது.  இளவரசனும் அங்கு இங்கு என்று எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாலும்  அவரால் அந்த குதிரையை கண்டுபிடிக்க முடியவில்லை . அவர் திகைத்து நின்று கொண்டிருக்கும் போது தலைக்கு மேல் ஒரு கருடன்  பறப்பதைக் கண்டார் . அப்பொழுதுதான் அவருக்கு தான் முதலில் பள்ளத்திலிருந்து காப்பாற்றிய மூதாட்டியின் நினைவு வந்தது . தன்னுடைய பையில் இருந்து அந்த சிறிய மணியை எடுத்து ஒரு முறை அடித்தார்.  



சிறகடித்துக் கொண்டு பறந்து கொண்டிருந்த கருடன் அவர் முன்னால்  வந்து நின்றதை கண்டார் . ஆனால் அந்த கருடனுக்கு அவர் எதையும் கூற வேண்டியது இருக்கவில்லை. அந்த கருடன்  அவரைப் பார்த்து “ எனக்கு உன்னை பற்றி எல்லாம் தெரியும் . இந்த மணி உனக்கு எப்படி கிடைத்தது என்பதும் எனக்குத் தெரியும் . இப்பொழுது நீ அந்த பறக்கும் நாகத்தின் தாயாரின் குதிரையைத் தேடிக் கொண்டிருக்கிறாய்.  மேலே நீ பார்த்தால் மேகத்துக்கு இடையில் அந்த குதிரை பறப்பதை உன்னால் பார்க்க முடியும்.  நான் என் நண்பர்கள் ஆன எல்லா கருடன்களையும் வானத்துக்கு அனுப்பி அந்த குதிரையை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் படி உத்தரவிடுகிறேன் என்று கூறியது.

 


( இந்தக் கதை ஐரோப்பாவின் பழங்கதைகளில் இருந்து தழுவி எழுதப்பட்டது )

 

பாகம் 5 தொடரும்

No comments:

Post a Comment